Wednesday, 8 November 2017

பாரதியார் கவிதைகள்

நடிப்புச் சுதேசிகள்


நெஞ்சி லுரமுமின்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி - கிளியே 
வாய்ச்சொல்லில் வீரரடி.

கூட்டத்திற் கூடிநின்று
கூவி பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி - கிளியே
நாளில் மறப்பாரடி

சொந்த அரசும்புவிச் 
சுகங்களு மாண்புகளும் 
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே 
அலிகளுக் கின்பமுண்டோ?

கண்க ளிரண்டிருந்தும் 
காணுந் திறமையற்ற 
பெண்களின் கூட்டமடி - கிளியே
பேசிப் பயனென்னடி

யந்திர சாலையென்பார் 
எங்கள் துணிகளென்பார் 
மந்திரத் தாலேயெங்கும் - கிளியே 
மாங்கனி வீழ்வதுண்டோ 

உப்பென்றும் சீனியென்றும் 
உள்நாட்டு சேலையென்றும் 
செப்பித் திரிவாரடி - கிளியே 
செய்வ தறியாரடி

தேவியர் மானமென்றும்
தெய்வத்தின் பக்தியென்றும் 
நாவினாற் சொல்வதல்லால்  - கிளியே 
நம்புத லற்றாரடி

மாதரைக் கற்பழித்து 
வன்கண்மை பிறர்செய்யப் 
பேதைகள் போலுயிரைக் - கிளியே 
பேணி யிருந்தாரடி 

தேவிகோ யிலிற்சென்று 
தீமை பிறர்கள்செய்ய 
ஆவி பெரிதென்றெண்ணிக்  - கிளியே 
அஞ்சிக் கிடந்தாரடி 

அச்சமும் பேடிமையும் 
அடிமைச் சிறுமதியும் 
உச்சத்திற் கொண்டாரடி - கிளியே 
ஊமைச் சனங்களடி 

ஊக்கமும் உள்வலியும் 
உண்மையிற் பற்றுமில்லா 
மாக்களுக் கோர்கணமும் - கிளியே 
வாழத் தகுதியுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி 
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் - கிளியே 
இருக்க நிலைமையுண்டோ?

சிந்தையிற் கள்விரும்பிச் 
சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதரமென்பார் - கிளியே 
மனதி லதனைக்கொள்ளார் 

பழமை பழமையென்று 
பாவனை பேசலன்றிப்
பழமை இந்தநிலை - கிளியே 
பாமர ரேதறிவார்?

நாட்டி லவமதிப்பும் 
நாணின்றி இழிசெல்வத் 
தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே 
சிறுமை யடைவாரடி

சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்திற் சாதல்கண்டும் 
சிந்தை யிரங்காராடி - கிளியே 
செம்மை மறந்தாரடி 

பஞ்சத்தும் நோய்களிலும் 
பாரதர் புழுக்கள்போல் 
துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் - கிளியே 
சோம்பிக் கிடப்பாரடி.

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் 
தடுக்க முயற்சியுறார் 
வாயைத் திறந்து சும்மா - கிளியே 
வந்தே மாதரமென்பார்.

Thursday, 8 May 2014

அமைதி

ஊரெங்கும் பசுமை பூத்திருக்க
அந்தியில் ஆம்பல் மணம்வீச
கார்மேகம் தெளித்த மழைச்சாரலில்
மண்வாசம் மணம் வீச
சாரலோடு வந்த தென்றலும்
தென்றலோடு வந்த மலர்வாசதையும்
மழை பொழிய காத்திருக்கும் வானத்தையும்
மேல்நோக்கி பார்த்த ஈழமைந்தனின்
கண்இமை கீழ் அசைவதற்குள்
வானத்தை பீறிட்டது இடிமுழக்கம்
மழை நீரை எதிர்பார்த்த அவன் கண்களுக்கு
பொழிந்தது நீர்மழையல்ல தீமழை
கார்மேகம் தெளித்ததோ தோட்டாக்களை
தென்றல் அனலாய் வீசியது
மண்வாசமோ ரத்தவாடையாய் மாறியது
தமிழன் நெற்றி வியர்வை காய்வதற்குள்
மண்ணில் குருதி உறைந்துபோனது
வானமும் அவனுக்கு பொய்த்தது
இறுதியாக அவன் உறங்கியது
அன்று முன் தினமே
மறுமுறை இமைகள் சேர்ந்தால்
மீண்டும் பிரியாது
"அமைதி வேண்டி"
அமைதியாய் வாழ்ந்த கிராமம்
உண்மையில் அமைதியாய் காட்சியளித்து
"இங்கே அமைதி அமைதியானது"